சுற்றுசூழல் – (பீ. எம். கமால்)
(அதிராம் பட்டினம் கவியரங்கக் கவிதை )
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
அகிலத்தின் சுற்றுசூழல்
அம்மணமாய்க் கிடந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை இழந்து
அரபகத்து பாலைவனம்
அநாதையாய்க் கிடந்தது !
சூட்டின் கேட்டில்
சுருண்டுபோய்க் கிடந்தது
பாலை மட்டுமா ?
பாவி மனிதனின்
பண்பாடும் கூட !
சீழ்நாறிக் கொண்டிருந்த
சிலை களிலெல்லாம்
பாவத் தூசுகள்
பரவிக் கிடந்ததால்
ஏகத்துவ வைரத்தை
உப்புகற்கள் உரசிப் பார்த்தன !
மனிதர்களுக்கு
பல தெய்வங்கள்
குலதெய்வங்கள் ஆனதால்
காற்றும் கூடக்
கற்பழிந்திருந்தது !
சுற்றுசூழல்
மாறுபட்டிருந்ததால்
ஆன்ம வெளி யங்கே
அழுக்காகிக் கிடந்தது !
சுற்றுச் சூழலைக்
கற்றுக்கொள்ளவும்
கடவுளை மனதில்
பெற்றுக் கொள்ளவும்
கல்வி அப்போது
காணாமல் போயிருந்தது
அந்நேரத்தில்
பொன்னொளி ஒன்று
புறப்பட்டு வந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை நட்டு
மகிமைப் படுத்த
மன்னர் நபிகள்
மண்ணில் உதித்தார்
வள்ளல் நபியின்
வாய்மொழி அமுத
வார்த்தை மரங்கள்
நடப்பட்டதால் தானே
மனிதனின் மனச்
சுற்றுச் சூழல்
சுகாதாரம் பெற்றது !
அது-
வெறும்.
மரங்கள் மட்டுமல்ல-
மண்ணுக்கு கிடைத்த
மகத்தான வரங்கள் !
தென்னை மரங்களுக்கு
அன்னை மரமான
பேரீச்சை மரங்களும்
பேசிய காலமது !
‘ஆல’ மரங்களும்
‘அரச” மரங்களும்
பேரீச்சை மரத்திடம்
பிச்சை கேட்டன !
பெருமானாரின்
தண்ணொளி பட்டுத்
தழைத்தன அறங்கள் !
வள்ளல் நபியின்
வருகையதனால்
பாலை மட்டுமா
பரிசுத்தம் ஆனது ?
அகிலமே அன்று
அசுத்தம் நீங்கியது !
விண்ணில் விழுந்த
ஒசான் ஓட்டையை
ஒக்கிட வந்த
ஒப்பற்ற நபிகள்
அதனால் தானோ
ஒரு விரல் நீட்டி
ஒண் மதியைப் பிளந்தார்கள் ?
சுற்றுச் சூழல் தினம்
ஜூன் ஐந்து தேதி அல்ல !
உத்தம நபிகள்
உதித்த நன்னாளே
சுத்தம் பிறந்த நாள்
சுற்றமும் மகிழ்ந்த நாள் !
சுத்தம் எனபது
ஈமானில் பாதியென்று
எந்த மதமும்
எடுத்துச் சொன்னதில்லை !
சுற்றுச் சூழலைச்
சுத்தம் செய்வதற்கு
சொன்னது நபிகள்
நாயகம் மட்டுமே
மார்க்க மா மேதைகளே
இதோ நமது
மார்க்கச் சுற்றுசூழல்
மாசாகிக் கொண்டிருக்கிறது !
பாலி தீன்களால் மட்டுமல்ல -
போலிதீன் களாலும்
பொலிவிழந்து கிடக்கிறது !
பெருமானாரைப்
பின்பற்றி நடந்த
அருமைததோழரை
ஆருயிர் நேசரை
சிறுமைப்படுத்தும்
கிரிமினல் சிலரால்
சத்திய வழியின்
சுற்றுச்சூழலில்
குப்பைகள் இங்கே
கொட்டப்படுகிறது !
தீன் நெறியில்
வீண் நெறியைத்
திணிக்கின்ற பேர்களை
சுத்தபடுத்துதற்கு
சோதரரே ! தயவுசெய்து
கையில் துடைப்பக்
கட்டையுடன் வாருங்கள் !
இஸ்லாத்தின் சோலைகளில்
இடுகின்ற குப்பைகளை
எடுத்து எறிவதற்கு
எல்லோரும் வாருங்கள் !