தாயே ! தமிழ்த் தாயே !
(பீ. எம் . கமால், கடையநல்லூர்)
தாயே ! தமிழ்த் தாயே !
தாரணியில் முதல் தாயே !
மூச்சுக்கும் பேச்சுக்கும்
முன்பிறந்த மொழித் தாயே !
ஆதிமனி தன்பேசி
ஆனந்தப் பட்டமொழி
நீதிநெறி தந்தமொழி
நீயின்றி வேறுண்டோ ?.
சொல்லுக்கு சுவையூட்டி
சொக்கவைக்கும் வகைகாட்டி
வில்லுக்கும் புல்லுக்கும்
வீர விதை தருகின்றாய் !
தேனும் தெவிட்டாத
தீங்கனி யும்கலந்து
திருநாவில் வந்தமர்ந்து
தெள்ளமுதாய் மலர்கின்றாய் !
உலகத்து மொழிகளுக்கு
ஊற்றானாய் உப்பானாய் !
எம்மொழிக்கும் முதலாக
செம்மொழியாய் நீயானாய் !
இலக்கிய இலக்கணப்
பொன்னாடை பூண்டுநிதம்
விலக்கியே கசடுகளை
வீறுகொண்டு எழுகின்றாய் !
கற்றிட எளியமொழி
காசினியில் மூத்தமொழி !
வெற்றிட மாவதற்கு
விடுவோமா தமிழரெல்லாம் ?
நம்மை அழிப்பதற்கு
நாடுகின்ற பேர்களெல்லாம்
தம்மையே அழித்து
தலைகுனிந்து போவார்கள் !
தமிழா ! நம் தமிழ்மொழியே
தாரணியை ஆளுதற்கு
கவிழாத தலையோடு
கதவுடைத்து வெளியேவா !
No comments:
Post a Comment