Wednesday, 4 January 2012


தாயே ! தமிழ்த் தாயே !
(பீ. எம் . கமால், கடையநல்லூர்)

தாயே ! தமிழ்த் தாயே !
தாரணியில்  முதல் தாயே !
மூச்சுக்கும் பேச்சுக்கும்
முன்பிறந்த மொழித் தாயே !

ஆதிமனி தன்பேசி
ஆனந்தப் பட்டமொழி
நீதிநெறி தந்தமொழி
நீயின்றி வேறுண்டோ ?.

சொல்லுக்கு சுவையூட்டி
சொக்கவைக்கும் வகைகாட்டி
வில்லுக்கும் புல்லுக்கும்
வீர விதை தருகின்றாய் !

தேனும் தெவிட்டாத
தீங்கனி யும்கலந்து
திருநாவில் வந்தமர்ந்து
தெள்ளமுதாய் மலர்கின்றாய் !

உலகத்து மொழிகளுக்கு
ஊற்றானாய் உப்பானாய் !
எம்மொழிக்கும் முதலாக
செம்மொழியாய் நீயானாய் !

 இலக்கிய இலக்கணப்
பொன்னாடை பூண்டுநிதம்
விலக்கியே கசடுகளை
வீறுகொண்டு எழுகின்றாய் !


கற்றிட எளியமொழி
காசினியில் மூத்தமொழி !
வெற்றிட மாவதற்கு
விடுவோமா தமிழரெல்லாம் ?


நம்மை அழிப்பதற்கு
நாடுகின்ற பேர்களெல்லாம்
தம்மையே அழித்து
தலைகுனிந்து போவார்கள் !


தமிழா ! நம் தமிழ்மொழியே
தாரணியை ஆளுதற்கு
கவிழாத தலையோடு
கதவுடைத்து வெளியேவா !








 

No comments:

Post a Comment