சுற்றுசூழல் – (பீ. எம். கமால்)
(அதிராம் பட்டினம் கவியரங்கக் கவிதை )
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
அகிலத்தின் சுற்றுசூழல்
அம்மணமாய்க் கிடந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை இழந்து
அரபகத்து பாலைவனம்
அநாதையாய்க் கிடந்தது !
சூட்டின் கேட்டில்
சுருண்டுபோய்க் கிடந்தது
பாலை மட்டுமா ?
பாவி மனிதனின்
பண்பாடும் கூட !
சீழ்நாறிக் கொண்டிருந்த
சிலை களிலெல்லாம்
பாவத் தூசுகள்
பரவிக் கிடந்ததால்
ஏகத்துவ வைரத்தை
உப்புகற்கள் உரசிப் பார்த்தன !
மனிதர்களுக்கு
பல தெய்வங்கள்
குலதெய்வங்கள் ஆனதால்
காற்றும் கூடக்
கற்பழிந்திருந்தது !
சுற்றுசூழல்
மாறுபட்டிருந்ததால்
ஆன்ம வெளி யங்கே
அழுக்காகிக் கிடந்தது !
சுற்றுச் சூழலைக்
கற்றுக்கொள்ளவும்
கடவுளை மனதில்
பெற்றுக் கொள்ளவும்
கல்வி அப்போது
காணாமல் போயிருந்தது
அந்நேரத்தில்
பொன்னொளி ஒன்று
புறப்பட்டு வந்தது !
அறங்கள் என்னும்
மரங்களை நட்டு
மகிமைப் படுத்த
மன்னர் நபிகள்
மண்ணில் உதித்தார்
வள்ளல் நபியின்
வாய்மொழி அமுத
வார்த்தை மரங்கள்
நடப்பட்டதால் தானே
மனிதனின் மனச்
சுற்றுச் சூழல்
சுகாதாரம் பெற்றது !
அது-
வெறும்.
மரங்கள் மட்டுமல்ல-
மண்ணுக்கு கிடைத்த
மகத்தான வரங்கள் !
தென்னை மரங்களுக்கு
அன்னை மரமான
பேரீச்சை மரங்களும்
பேசிய காலமது !
‘ஆல’ மரங்களும்
‘அரச” மரங்களும்
பேரீச்சை மரத்திடம்
பிச்சை கேட்டன !
பெருமானாரின்
தண்ணொளி பட்டுத்
தழைத்தன அறங்கள் !
வள்ளல் நபியின்
வருகையதனால்
பாலை மட்டுமா
பரிசுத்தம் ஆனது ?
அகிலமே அன்று
அசுத்தம் நீங்கியது !
விண்ணில் விழுந்த
ஒசான் ஓட்டையை
ஒக்கிட வந்த
ஒப்பற்ற நபிகள்
அதனால் தானோ
ஒரு விரல் நீட்டி
ஒண் மதியைப் பிளந்தார்கள் ?
சுற்றுச் சூழல் தினம்
ஜூன் ஐந்து தேதி அல்ல !
உத்தம நபிகள்
உதித்த நன்னாளே
சுத்தம் பிறந்த நாள்
சுற்றமும் மகிழ்ந்த நாள் !
சுத்தம் எனபது
ஈமானில் பாதியென்று
எந்த மதமும்
எடுத்துச் சொன்னதில்லை !
சுற்றுச் சூழலைச்
சுத்தம் செய்வதற்கு
சொன்னது நபிகள்
நாயகம் மட்டுமே
மார்க்க மா மேதைகளே
இதோ நமது
மார்க்கச் சுற்றுசூழல்
மாசாகிக் கொண்டிருக்கிறது !
பாலி தீன்களால் மட்டுமல்ல -
போலிதீன் களாலும்
பொலிவிழந்து கிடக்கிறது !
பெருமானாரைப்
பின்பற்றி நடந்த
அருமைததோழரை
ஆருயிர் நேசரை
சிறுமைப்படுத்தும்
கிரிமினல் சிலரால்
சத்திய வழியின்
சுற்றுச்சூழலில்
குப்பைகள் இங்கே
கொட்டப்படுகிறது !
தீன் நெறியில்
வீண் நெறியைத்
திணிக்கின்ற பேர்களை
சுத்தபடுத்துதற்கு
சோதரரே ! தயவுசெய்து
கையில் துடைப்பக்
கட்டையுடன் வாருங்கள் !
இஸ்லாத்தின் சோலைகளில்
இடுகின்ற குப்பைகளை
எடுத்து எறிவதற்கு
எல்லோரும் வாருங்கள் !
ஒற்றுமைக் கயிற்றினைப் பற்றிட வாருங்கள் !
ReplyDelete(பி, எம். கமால், கடையநல்லூர்)
போதும்
இளைஞனே ! போதும் !
பொங்கி எழுந்ததும்
போர்க்கொடி தூக்கியதும்
போதும் !
ஜும் ஆவுக்கு
வரும் கூட்டம்
ஐவேளைத் தொழுகைக்கு
வரவில்லையே ஏன் ?
உன் செயல்பாட்டில் கோளாறா ?
சிந்தித்தாயா ?
எத்தனை பேரை நீ
இஸ்லாத்தில் இணைத்தாய் ?
வலிமார்கள் செயல்பாட்டை
வழியாக்கிக் கொண்டவர்கள்
தாமாக முன்வந்து
தழுவினார்கள் இஸ்லாத்தை !
உன்செயல் பாடுகளில்
ஓராயிரம் ஓட்டைகள் !
எதிர்வசவு ஏராளம் !
எதிரிகளோ தாராளம் !
வேட்டை பணத்தால்
கோட்டையில் குத்து வெட்டு !
அல்லாஹ்வின் பள்ளியிலே
அறிவிக்கைப் பலகைகள் !
இன்னார்தான் வரவேண்டும்
என்ற கட்டுப்பாடுகள் !
அதனால்-
சல்லடை ஆகிவிட்ட
ஜமா அத்துப் பிரிவுகள் !
எப்படிப் பிறர்நம்மை
ஏறிட்டுப் பார்ப்பார்கள் ?
ஒற்றுமைக் கயிற்றினை
கயிறிழுக்கும் போட்டிக்கு
கொண்டுவந்து திடல்வெளியில்
குவித்து வைத்தது
யார் தோழா ?
போதும் இளைஞனே !
போதும் நீ இங்கு
பொங்கி எழுந்தது போதும் !
உண்டியல் குலுக்கி
சண்டையிட்டதும் போதும் !
உன்
தெருமுனைப் பிரச்சாரம்
மூமீன்களை உருவாக்கட்டும் !
உன்
நல்லொழுக்கக் காந்தம்
பிற சமூகத்தவரை
பிணைக்கட்டும் உன்னோடு !
அணைக்கட்டாய் தடைக்கல்லாய்
ஆகிவிட வேண்டாம் நீ !
இறுதிவரை ஏக இறைக்
கொள்கை உயிர் வாழும் !
அந்தக்
கொள்கையைச் சொல்லியே
கோஷ்டி பிரிக்க வேண்டாம் !
கலந்து வாழும் வாழ்க்கைக்கு
கபன் துணி வாங்க வேண்டாம் !
தொழாத பேர்களை-
பாங்கின் பொருளுணர்த்தி
பள்ளிக்கு அனுப்புங்கள் !
தௌஹீது அங்கே
தழைத்துவிடும் பாருங்கள் !
முன்பெல்லாம்-
கைப்பொருளை இழந்து
மெய்ப்பொருளைக் கண்டார்கள் !
தௌஹீது அவர்களிடம்
தரிபட்டு இருந்தது !
இப்போதோ-
தௌஹீது எனபது
விளம்பரம் மலிந்த
வியாபாரம் ஆனது !
பணவரவு தௌஹீதின்
வரப்புகளிலும் பாய்ந்ததால்
பகைமைப் பயிர் வளர்ந்து
பாழ் பட்டுப் போகிறது !
எல்லா ஜமா அத்தையும்
எடுத்தெறிந்து விட்டால்
தவ்ஹீதுக் கொள்கை
தழைத்தோங்கி வளர்ந்து விடும் !
சண்டையெல்லாம் மாறி
சமாதானம் வந்துவிடும் !
மேடைக ளெல்லாம்
பாடைகளாகி
பகைமை அங்கே
பயணம் போய்விடும் !
முன் நெடுங்காலத்தில்
முளைத்ததில்லை ஜமா அத்து
தௌஹீதுக் கொள்கை
தானாக வளர்ந்தது !
இப்போதோ-
பணமே தௌஹீதாய்ப்
பரிணாமம் பெற்றதினால்
கணந்தொறும் கைகலப்பு !
கண்ணெதிரில் அடிதடிகள் !
கொள்கைக்கொரு பள்ளிவாசல்
கொடிவகைகள் தோரணங்கள் !
வெள்ளோட்டம் பார்பதற்கு
வீதிக்கொரு ஊர்வலங்கள் !
என்கூட்டம் பெரிதென்று
இறுமாப்பு கூக்குரல்கள் !
பெண்கள் நடுவீதிகளில் !
பிள்ளைகள் இடுப்புகளில் !
கலிமாவைச் சொல்வதற்கா
கைகலப்புக் கலாட்டாக்கள் ?
கல்வெட்டாய் ஆகிவிட்ட
கலிமாவைச் சொல்லுகின்ற
திருநாவில் தேன்மணக்கும்
திசையெல்லாம் தீன் மணக்கும் !
சொல்லுங்கள் கலிமாவை
சுவனத்தில் எதிரொலிக்க !
வெல்லுங்கள் துனியாவில்
வீறு நடை போடுங்கள். !
கொடிகளைத் தூக்கிக்
குப்பையில் எறியுங்கள் !
அடிபணிந் தெழுவது
அல்லாஹ்வுக் கேஎன்று
அடிமனதில் எண்ணி
அமல்களைச் செய்யுங்கள் !
தானைத் தலைவர்
தாஹா நபிமட்டுமே !
தறுதலை களுக்கெல்லாம்
தலைவணங்கா தீர்கள் !
நரக நெருப்புக்கு
விறகாகி டாமல்
சுவனத் தோட்டத்து
மலராக வாருங்கள் !
கொடிகளைத் தூக்கிக்
குப்பையில் எறிந்துவிட்டு
ஒற்றுமைக் கயிற்றினைப்
பற்றிட வாருங்கள் !
i